Breaking News

ஹபாயா சர்ச்சை: சம்பந்தனிற்கு கடிதம் எழுதினார் ரிசாட் பதியுதீன்!

சமரசப் பேச்சுவார்த்தையின் மூலம் திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் அபாயா  பிரச்சினைக்கு நியாயமான தீர்வைக்காண தன்னோடு ஒத்துழைக்குமாறு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத்  பதியுதீன் எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருகோணமலை சண்முக இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியர்கள், அபாயா ஆடை அணிவதில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பிலேயே எதிர்கட்சித் தலைவருக்கு, அமைச்சர் றிசாத்  பதியுதீன் அவர்கள் எழுதியுள்ள அவசரக் கடிதத்தில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.


அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

திருகோணமலை சண்முக இந்து மகளிர் கல்லூரி முஸ்லிம் ஆசிரியர்களின் ’அபாயா’ விவகாரத்தில் தலையிட்டு இந்தப் பிரச்சினையை சுமூகமாகத் தீர்த்து வைக்க மூத்த அரசியல்வாதியான நீங்கள் முன் வர வேண்டும். இந்த சம்பவத்தைப் பயன்படுத்தி தமிழ் – முஸ்லிம் உறவை சீர்குலைக்க முற்படும் சக்திகள் குறித்து நாம் விழிப்பாயிருக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மூவினமும் பரஸ்பர புரிந்துணர்வுடனும், சுதந்திரமாக வாழும் திருமலை மாவட்டத்தில் இவ்வாறானதொரு சம்பவம் ஏற்பட்டிருப்பது, மிகவும் கவலைக்குரிய விடயம்  இது இனங்களுக்கிடையிலான உறவை சீர்குலைக்கும் துரதிஷ்ட நிலையை  உருவாக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது

யுத்தம் முடிந்து சமாதானம் ஏற்பட்ட பின்னர் தமிழ் – முஸ்லிம் உறவு தழைத்தோங்கி மலர்ந்து வரும் தற்போதைய கால கட்டத்தில், இவ்வாறான சிறிய சம்பவங்கள் பெரிதுபடுத்தப்பட்டு சிறுபான்மை  இனங்களுக்கிடையில் இனப்பிரச்சினையை உருவாக்க  நாங்கள் அனுமதிக்க முடியாது.

திருமலை மாவட்ட முஸ்லிம்களுடன் நீண்டகாலமாக நல்லுறவுடனும், தேங்காய் பூ பிட்டு போல்  வாழும் இரு  சமுதாயம் என்பது உங்களைப் போன்ற மூத்த தலைவர்களுக்கு  நன்கு தெரியும். அது மட்டுமன்றி நான் உட்பட நான் சார்ந்த சமூகமும் உங்களை ஒரு நீதியான, நேர்மையான அரசியல் தலைவராகவே கருதி வருகின்றோம். அநியாயங்களுக்கு நீங்கள் ஒரு போதுமே துணை போனவர் அல்ல. அதேபோன்று இனியும் அவ்வாறு நீங்கள் அநீதியான செயற்பாடுகளுக்கு இடமளிக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையிலேயே இந்தக் கடிதத்தை எழுதுகின்றேன்.

மேலும் பிரச்சினையில் அவசரமாக நீங்கள் தலையிட்டு, சமரசத் தீர்வொன்றைக் காண வேண்டுமென நாம் விரும்புகின்றோம்.
முஸ்லிம்களின் கலாச்சார உடையானது இன்று, நேற்று திடீரென்று வந்த ஒன்றல்ல என்பதை, முஸ்லிம்களுடன் நெருங்கி வாழும்  நீங்கள் நன்கறிவீர்கள். தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரே மொழி பேசும் சிறுபான்மைச் சமூகமாகும். கடந்த காலங்களில் இரண்டு சமூகங்களுக்கிடையிலான சில பிரச்சினைகளை பூதாகரமாக்கி, பிளவுகளை ஏற்படுத்தி அவற்றில் குளிர்காய பல்வேறு தீய சக்திகள் மறைமுகமாக செயல்படுகின்றன. அதே போன்று மீண்டும் தமிழ் – முஸ்லிம் உறவை சீர்குலைத்து ஆதாயம் தேட சில தீயசக்திகள்  முயற்சி செய்கின்றன
எனவே இனியும் இரண்டு சமூகங்களும்  புரிந்துனர்வுடன் வாழ வேண்டும் அதற்கான அடித்தளம் கட்டியெழுப்பப்பட வேண்டியது இன்றைய  காலத்தின் தேவையாகும்.

அந்தவகையில், தற்போது உருவாகியுள்ள அபாயா பிரச்சினையை வைத்து தமிழ் முஸ்லிம்  ஒற்றுமையையும், நற்பையும் சிதைத்து, சின்னாபின்னமாக்குவதற்கு இவ்வாறான சிறிய சம்பவங்கள் அடித்தளமாக அமைந்து விடக்கூடாது.


எனவே, திருமலை மாவட்டத்தின் மூத்த அரசியல்வாதியாகவும், தமிழர்களின் தலைவராகவும் அனைத்து சமூகங்களினாலும் பெரிதும் மதிக்கப்படுபவரான நீங்கள், திருமலை மாவட்ட தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள், சமூகத்தலைவர்கள், இந்த விடயத்தில் சம்பந்தப்பட்டோர் மற்றும் புத்திஜிவிகள் கல்விமான்கள்  அனைவரையும் அழைத்து, சமரசப் பேச்சுவார்த்தையின் மூலம் இந்தப்பிரச்சினைக்கு சுமூகமான,தீர்வை ஏற்படுத்துவதற்கு உங்கள் உதவியை  அன்பாய் வேண்டுகின்றேன்- என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments